Saturday, January 27, 2007

நகுலன் நாவல்கள் - சன்னாசி (Nagulan Novels)

நகுலன் நாவல்கள்
November 16, 2005
Filed under: பொது — சன்னாசி @ 10:26 pm


நகுலனைப் பற்றி ஏதாவது எழுதிவைக்கவேண்டுமென்று வெகுநாட்களாக நினைத்துக்கொண்டிருந்ததுண்டு. சில மாதங்களுக்கு முன்பு காவ்யா வெளியிட்ட நகுலன் நாவல்கள் தொகுதியைப் படித்து முடித்திருந்தேன். புத்தகத்தை மறுபடி உருவிப் பார்த்தால், quotation fetishல் ஊறி மூழ்கி புத்தகம் முழுவதும் கோடு போட்டு வைத்து முதல் பக்கத்தில் பக்க எண்களைக் குறித்து வைத்திருந்ததும் அகப்பட்டது. நிழல்கள் (1965), நினைவுப் பாதை (1972), நாய்கள் (1974), நவீனன் டயரி (1976), சில அத்தியாயங்கள் (1983), இவர்கள் (1992), வாக்குமூலம் (1992), அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி (2002) என்று எட்டு நாவல்கள் (அல்லது அப்படி நகுலனால் குறிக்கப்பட்டவை). ரங்கநாதன் தெருவில் அப்போது இருந்த முன்றிலில் “வாக்குமூலம்” வாங்கிப் படித்ததுண்டு, அதன்பிறகே நாய்களையும் நவீனன் டைரியையும் படித்திருக்கிறேன். எழுதிய காலவரிசையில் படிப்பது ஒரு இம்சையளிக்கும் விஷயமென்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்; எழுதிய வரிசையைவிட வாசிக்கும் வரிசையே முக்கியமென்று எத்தனையோ பேர் சொல்லிக் கேட்டதுண்டு, படித்ததுண்டு. இந்த எட்டு நாவல்களும் ஒருவகையில் தனித்தனியாக இருப்பினும், ஒருவகையில் அனைத்தும் ஒன்றே போலவும், வேறு வேறு பெயர்களில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் ஒருவகையில் கலைடாஸ்கோப்புக்குள் திருப்பலுக்கேற்றவாறு நிறங்காட்டும் கண்ணாடித் துகள்கள்போலவும்தான் தோன்றுகிறது. நாவல்களில் வரும் பாத்திரங்களைக் குறித்துச் சுட்டிப் பேசுவதும் அவசியமற்ற ஒன்றாய்த்தான் தோன்றுகிறது.

நகுலனும் அவர் பாத்திரங்களும் குறிப்பிடும் எழுத்தாளர்கள்/தத்துவவாதிகளனைவரும் - விர்ஜினியா வுல்ஃப், ஜேம்ஸ் ஜாய்ஸ், விட்கென்ஸ்டைன் (Wittgenstein), ஹஸ்ஸர்ல் (Edmund Husserl), ஹைடெக்கர் (Martin Heidegger) அனைவருமே ஒருவகையில் இருப்பைக்குறித்துக் கேள்வியெழுப்பியவர்கள்தான். ஓரளவு பொதுவாக எனக்குத் தெரிந்தவரையில் விட்கென்ஸ்டைனைத் திரும்பத் திரும்ப நகுலன் குறிப்பிடுவது, தான் எழுதப்படுவது யாராலும் புரிந்துகொள்ளப்படாமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தாலும், விட்கென்ஸ்டைன், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், சற்று முன்பாக ஜான் லாக் போன்றவர்கள் அலசிய ‘மொழியின் தனித்துவம்’ குறித்த, குறிப்பாக விட்கென்ஸ்டைனின் ‘தனி மொழி’ (Private Language) குறித்த கருத்தாக்கங்களிலிருந்து தன் படைப்புக்களுக்கான ஆதாரங்களைத் தேடவோ, அல்லது ஒரு சாத்தியங்குறைவான சாத்தியத்தில் அக்கருத்தாக்கங்களுக்கான எதிர்-நிர்ணயமாகத் தன் படைப்புக்களை நிறுவவோ முயலுமொரு முயற்சியாகவோதான் தோன்றுகிறது. புனைவைப் படிக்கும் அதே வரிசையற்ற மனோநிலையுடன் இதில் சில சிந்தனைகளைக்குறித்துப் படித்திருந்தாலும், மூலப் புத்தகங்களில் இன்னும் பரிச்சயமுள்ளவர்கள் இதுகுறித்து இன்னும் விளக்கமாக எழுதினால் நன்றாயிருக்கும். நகுலனைப் படித்துப் பார்க்க விரும்புகிறவர்கள் ஆர்வமிருப்பின் இந்தத் ‘தனி மொழி’ என்னும் கருத்தாக்கம் சென்ற, செல்லும் திசைகள் குறித்துப் படித்துப்பார்க்க முயல்வதும் நலம். புனைவு என்ற நிலையில் இயங்கும் மனம், தத்துவங்களை/அதுரீதியிலான ஒரு சாரத்தை எப்படிக் கையாள்கிறதென்று பார்க்கையில் ஜெயமோகன், சுந்தர ராமசாமி போன்றவர்களை ஒரு துருவத்தில் வைத்தால் நகுலன் போன்றவர்களின் எழுத்துக்கள் தானாக மறு துருவத்தில் பதிந்துகொண்டுவிடுகின்றன. வாழ்விலிருந்தும், புலனுணர்விலிருந்தும் தங்களுக்கெனப் பிரத்யேகமான சங்கிலித் தொடர்களை உருவாக்கிக்கொண்டு, dialectic என்பதற்கும் narrative என்பதற்குமிடையிலுள்ள இடைவெளி கரைந்து கிடைக்கும் படைப்புக்கள் தமிழில் தத்துவவியல் வழியாகக் கிடைப்பதை/பரிச்சயமாவதைவிட, இதுமாதிரிப் புனைவுகள் வழியாகப் பரிச்சயமாகும்/கிடைக்கும் வாய்ப்புக்கள்தான் அதிகமாயுள்ளது என்பது ஒரு சாதாரண வாசகனாக உணரமுடியும் உண்மை. கிடைக்கும் செருப்புக்கேற்றமாதிரியெல்லாம் காலை வெட்டிக்கொள்வது போல இருக்கிறது இது என்றுதான் படிப்பவர்களுக்குத் தோன்றும்; ஆனால் இதைவிடத் தெளிவாக விளக்க என்னால் முடியவில்லை - இந்த விளக்கமுடியாத் தன்மைக்குக் காரணமும்கூட கிட்டத்தட்ட ‘தனி மொழி’ என்னும் அலசல்வழிக் கூறப்படும் “ஒரு மொழியின் பிரத்யேகத்தன்மைக்கு” எதிராகக் கூறப்படும் வாதங்களில் காணப்படும் ஓரளவான உண்மையாகவும் இருக்கலாம். தனிப்பட்ட ஒரு நபரின் மொழி அந்த நபருக்கு மட்டுமே பிரத்யேகமானதாயிருப்பின், அந்தப் பிரத்யேகமும் வெகு துல்லியமான பிரத்யேகமாயிருப்பின், மொழி என்றவொரு வகைப்பாட்டுக்குள் வரும் தகுதியையே அந்தப் “பிரத்யேக மொழி” இழந்துவிடுகிறது என்று கூறப்படுகிறது. அத் தகுதியை இழக்கக் கூறப்படும் காரணங்களிலொன்று அம்மொழியின் “பரிமாற்ற இன்மை”. பரிமாறிக்கொள்ளப்படுவதே மொழி என்ற நிர்ணயங்களிருக்கையில், தனிப்பட்ட ஒரு நபருக்குமட்டும் பிரத்யேகமாயிருக்கும் மொழி எவரைநோக்கிப் பேசப்படும், தன்னைநோக்கியே பேசப்படவேண்டுமெனில் பிறகு “தான்”னின் உபயோகம் என்ன, பின்பு அந்த மொழியின் உபயோகம் என்ன என்ற ரீதியில் விரிந்துகொண்டுபோகும் வாதங்களின் பின் புதைந்திருக்கும் காரணம், எழுத்து மொழியைவிட பேச்சு மொழிக்கு (குறைந்தபட்சம் மேற்கத்திய உலகத்திலாவது) கொடுக்கப்பட்ட அதி முக்கியத்துவத்தின் அடிப்படையாகவே அமைகிறது. குரல் என்பதைப் பிரத்யேகப்படுத்தத் தேவையான குறைந்தபட்ச பொதுப்படைத்தன்மையின் அதே அளவை எழுத்தில் பொருத்திப் பார்ப்பது சிரமம் என்றே இருக்கையில், வெளிப்பாட்டு முறை என்பதே உணர்த்தமுடிவது/உணர்த்தமுடியாதது என்று குறுகிவிட்ட தருணத்தில், எழுத்து, ஓவியம், சிற்பம், இசை அனைத்தும் இந்த இரண்டு பிரிவுகளிலும் பொருந்துவதை உணரமுடியும் மனம் அடையும் குழப்ப நிலைதான் திரும்பத் திரும்ப நகுலனின் ஒவ்வொரு நாவலிலும், மனிதர்களிலும் அவர்களது இயக்கங்களிலும், இடைவெளியின்றி நெருக்கமாகத் திணித்து அடைக்கப்பட்ட ஊறுகாய் ஜாடி போல, கவிழ்த்தாலும் கொட்டாத ஊறுகாய்கள் போல ஒருவகையில் உறைந்தும், ஒருவகையில் கையில் சிக்காத நெகிழ்ச்சியுடனும் நம்மை எதிர்கொள்கிறது. பரிமாற்றத்துக்கு மொழி எடுத்துக்கொண்ட உபகரணமான “சம்பவங்களை” உபகரணமாகவே உபயோகிக்க விருப்பமற்று, அதைப் பொடித்துக் கலைத்து, எங்கே சென்றாலும் உணரமுடியும் காற்று போலப் பொதுவில் பரவவிட்டுவிடுகிறது. பொதுவாகப் பரவவிட்டிருப்பதனாலேயே, ஒரு கட்டமைப்புக்குள் சிக்காததனாலேயே அது முக்கியத்துவமற்றதாக இருக்கக்கூடும் என்று கூச்சல்கள் எழுவது காலத்தின் கட்டாயம். அந்தக் கூச்சலையும் எதிர்பார்த்துப் பதட்டமடைவதை, ஜேஜே சில குறிப்புக்கள் வருவதற்கு முந்தைய (என்று நினைக்கிறேன்) காலகட்டத்திலேயே வந்த நிழல்கள், நினைவுப் பாதை, நாய்கள் மூன்றிலும் உணரமுடிகிறது. திரும்பத் திரும்ப சுசீலா சுசீலா என்று அரற்றுகிறார் நகுலன்/நவீனன்/இன்னும் பலர். தெகார்த்தே பற்றிப் பேசும் சுலோசனா நகுலனை/நவீனனை வசீகரிப்பதைவிட, தெகார்த்தே பற்றிப் பேசும் சுலோசனாவின் பைத்திய நிலைதான் இன்னும் நகுலனை வசீகரிக்கிறது, தன்னையே அந்தப் பைத்தியத்தினிடத்தில் வைத்துப் பொருத்திப் பார்த்துக்கொள்கிறார். தொடர்ந்து மனிதர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். மனிதர்கள் மூச்சுத்திணற வைக்காத நேரத்தில் ஊறுகாய் ஜாடிக்குள் அவர்களின் மனவோட்டங்கள் நிரம்பி மேலும் மூச்சுத்திணற வைக்கின்றன.

“நவீனன் ஒரு எழுத்தாளன் - நகுலன் ஒரு மனிதனின் புனைப்பெயர்”(பக்.280)

என்று நாய்கள் நாவலில் வரும் வாக்கியத்தின் சாரமே கிட்டத்தட்ட அனைத்துப் புத்தகங்களிலும் விரிகிறது. “இப்பொழுது மனம் “சுசீலா, சுசீலா” என்று மனனம் செய்வதைப் போல் அப்போது ஒரு சக மாணவனைச் சுற்றி அலைந்தது” (பக்.80), “எப்படி எப்படி எழுதினால் என்னைத் தெரிந்துகொள்ளலாம் என்றுதான் விதம் விதமாக எழுதிப் பார்க்கிறேன்” (பக்.68, நினைவுப்பாதை) என்று தன்னையும், தான் விரும்புபவற்றையும் “சுசீலா நான் உருட்டும் ஜபமாலை, நான் கண்ட தெய்வம்” (பக்.417, நவீனன் டைரி) என்று ஜபம் செய்து தன் விருப்பத்திற்கேற்றபடி அலங்கரித்து அலங்காரம்நீக்கி அலங்கரித்து அலங்காரம்நீக்குவதிலுள்ள அவஸ்தையை எழுத்தில் பதிவு செய்வதென்பதும் சாதாரணமல்ல, அதைப் படிப்பவன் உணரவேண்டுமே என்பதற்காக சமாதானங்கள், நகாசுகள் செய்யமுடியாமல் போவதிலுள்ள அவஸ்தையைச் சொல்லாமல் சொல்லமுடிவதும் சாதாரண விஷயமல்ல. ஜெயகாந்தன், சு.ரா போன்ற அவரது காலத்தைய எழுத்தாளர்களை இடித்து எழுதுவதும், நானூறு பக்கம்கூட எழுதாவிட்டால் என்ன நாவல் அது என்று கிண்டலடித்துக் கொள்வதுமென்று பல்வேறு தருணங்கள் புத்தகத்தினுள் இருப்பினும், அதை அரசியலாக, வம்புப்பேச்சாகப் பார்க்கமுடியாதது புத்தகத்தின் பிற பக்கங்களில் வழியும் துல்லியமான மன அவசத்தினால்தானென்று தோன்றுகிறது. நேரடியாக எதுவும் நகுலன் குறித்து எனக்குத் தெரிந்திராவிட்டாலும், “ஒரு கதையைத் திரும்பத் திரும்பப் பத்துத் தரம் திருத்தி எழுது” என்ற ரீதியில் இந்த நாவலின் பெரும்பாலான பக்கங்கள் எழுதப்பட்டிருக்குமென்று தோன்றவில்லை - எழுதப்பட்ட பக்கங்களை எந்த வரிசையிலும் மாற்றி அடுக்கிப் படித்துக்கொள்ளமுடிவது இலக்கியத்தை ஸ்பார்க்நோட்ஸ் மூலம் படிப்பதுபோலில்லையா என்று கேட்டுக்கொள்ளத் தோன்றினாலும், பாரதியைப்பற்றி “அவன் என்ன எழுதினாலும் அதற்குள் மரபு வந்து விழுகிறது” என்று நகுலன் கூறுவதைத்தான் என்னளவிலும் நகுலனைக்குறித்துச் சொல்லத் தோன்றுகிறது. இந்த நாவல்களின் பாத்திரங்களின் மனோபாவம் அசல் “தமிழ் மனத்துக்குச்” சாத்தியமா என்று கேட்டுப் பார்த்தால், சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. நோய்வசப்படுத்திவிடும் அசட்டை, அதனால் விளையும் வெறுமை, இப்படி விளையும் வெறுமை கொணரும் மகிழ்ச்சி, இப்படி விளையும் மகிழ்ச்சி தரும் நிமிஷநேர ஆசுவாசம், இப்படி விளையும் ஆசுவாசம் திரும்ப உருவியெடுத்துக்கொள்ளப்படும்போது ஊறும் அசல் வெறுமை, இது எதையும் உணராத/உணர்வதை உணர்த்தமுடியாத சூழல் இவற்றோடு சாய்ந்து ஓய்வெடுக்கும் கயிற்றுக் கட்டில்கள் என விரியும் வாழ்வின் ஒரு வலிய வட்டத்தின் அசல் ரூபத்தை நகுலனின் நாவல்களில், சிறுகதைகளில், சில கவிதைகளில் அடையமுடிந்ததுபோல படிக்கக் கிடைத்த வேறு பல தமிழ் எழுத்துக்களில் காணமுடிந்ததில்லை என்பது என்னளவிலான ஒரு அனுபவம்.

“உருவத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு தன்மையைத் தெரிவிக்க முடியுமா? எழுதுகின்ற நிர்ப்பந்தம் என்பது பார்க்கப்போனால் பேசுவதின் நிர்ப்பந்தத்தின் வேற்றுருவம் தானோ? ஆனால் எவ்வளவு பேர் எதைப்பற்றிப் பேசுகிறார்கள்? - பேசினாலும் பேசிக்கொண்டே இருக்கின்றார்கள்? - பேசவேண்டும் என்பதன் நிர்ப்பந்தம்தான் என்ன? சிந்தனையின் தனிமையிலிருந்து விடுபட ஒரு முயற்சி? நடக்கலாம், பேசலாம், தின்னலாம், படுத்துக்கொள்ளலாம், பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்கலாம் - இதெல்லாம் எதற்காக? இதைவிடப் பேசாமல் உட்கார்ந்து டயரி எழுதுவது நல்லதில்லையா, இகரமுதல்வி? வார்த்தைகளின் சப்தங்கள் எழுதும் எழுத்துக்களால் எவ்வாறு உருவாகின்றன? அகர முதல எழுத்தெல்லாம் - ஆரூட ஞானம் - நடைபாதை - தக்ளியில் நூல் நூற்பது மாதிரி - ஜபமாலை உருட்டுவது மாதிரி - “ (பக். 418, நவீனன் டைரி)

என்று தொடர்ந்து, “தனக்குத்தானே தான் இருக்கிறோமா என்று எப்பொழுதும் சந்தேகப்படும் டி.கே.துரைசாமி” (பக்.419, நவீனன் டைரி) என்னும் வாக்கியங்களில் “இருப்பைக் கேள்விக்குட்படுத்துதல்” என்ற தேய்பதத்தைத் தாண்டியும் தெரியும் புதிரை, புதிரின் விடைதெரியாத்தன்மை அளிக்கும் ஆசுவாசத்தை உணர்வது எளிதான ஒன்றாய்த்தானிருக்கிறது.

என்ன சொல்ல வர்றாரு டைரக்டர் என்ற கேள்விக்கும், பொறுமையாகப் படித்துப் பார்த்தால் ஒரு பதில் இருக்கிறது:

“அது சரி. நான் உன் நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். படிக்கச் சுவையாக இருக்கிறது என்பதைத் தவிர ‘எல்லாம் எதற்கு’ என்றுதான் எனக்கும் கேட்கத் தோன்றுகிறது. ஒரு எழுத்தாளன், ஒரு கவிஞன், இன்னொரு எழுத்தாளன், யாரோ ஒரு சச்சிதானந்தம் பிள்ளை, இவர்கள் மாறிமாறி வருவதும் பேசுவதையும் தவிர வேறொன்றும் நடப்பதாகத் தெரியவில்லையே. ஒரு பாத்திரத்தைப் பார்த்தால் அந்தப் பாத்திரம் கூட நான் தானோ என்று தோன்றுகிறது”.

“என்ன செய்வது. பார்க்கிறோம், பேசுகிறோம்; சிந்திக்கிறோம் கனவு காண்கிறோம், நாகரிகம் வளர வளர, நாற்காலியும் அதைச் செய்த தச்சனும் ஆதியில் ஒருவனும் ஒன்றும் பிணைந்திருப்பதைப்போல இப்பொழுது முடியாது. ஸைமன் வீல்”

இதே ரீதியில் தொடர்ந்து சொல்லிக்கொண்டு போகிறார்:

“நண்பா, எழுத்து என்பது சுக்கிலத் துளியோ சுரோணிதமோ இல்லை; படைப்பாளி அப்படிச் சொன்னாலும் அவை உயிரின் பீஜங்களுமல்ல; அவைகளிலிருந்து உதிப்பவை, விமர்சகர்கள் அப்படிச் சொன்னாலும், உயிருள்ள மனிதர்கள் இல்லை; பேப்பர் வெண்மை; மைக் கறுப்பு; இவை மூலம் கட்டவிழ்த்துவிடப்படும் நிழல்கள்; இவ்வளவுதான் நண்பா” (பக்.287, நாய்கள்)

என்று மௌனியின் பிரபலமான “எவரின் நடமாடும் நிழல்கள் நாம்” மை புனைவின் பாத்திரங்களுக்கும் பொருத்துகிறார்.

ஆகாயம் சாம்பல் நிறம்
அதனெதிர்
ஒரு ஊசிமரம்;
மைதான வெளியில்
ஆட்டம் கலைந்தபின்
உருவுமொரு
அம்பர சூன்யம் என்று மரணங்குறித்த சிந்தனைகளடுத்து நவீனனிடமிருந்து உதிருமொரு கவிதை (பக்.379, நவீனன் டைரி) கூட, மரணம் என்பதையும் தாண்டி, நினைவுகளிலிருந்து விடுபடமுடியாத சாபத்தைக்குறித்த ஒரு அடக்கப்பட்ட வசையாகத்தான் தோன்றுகிறது. எது எழுத்தை வசீகரமாக்குகிறது, ஏன், எது எதையுமே வசீகரமாக்குகிறதென்ற ஒரு விஷயத்தைப் புனைவில் எழுதமுயல்கையில் நாம் கற்பனைசெய்யக்கூடிய வார்த்தைப் பிரவாகங்களனைத்தையும் ஒரு சில சொற்கள் மூலமாக, நேரடியாகச் சொல்லாமல் தத்துவ மழை பொழியாமல் ஒரு சொடுக்கில் உணர்த்திவிட முடிவது, ‘அவன்’ மற்றும் ‘அவன்’னுக்கிடையான விளையாட்டுப்பொன்ற உரையாடலில் சாத்தியமாயிருக்கும்.

அவன்: அவ ஒரு நாள் சொன்னா “மணிப் பெரிப்பா நமோஸ்துதே”
அவன்: அவ்வளவுக்கு உயர்ந்துட்டயாக்கும்.
அவன்: அப்படி இல்லேடா - வார்த்தைகள் என்னை வசீகரிக்கின்றன” (பக்.471, நவீனன் டைரி)

தான் எழுதுவதைவிட்டு எழுத்தாளன் எவ்வளவு தூரம் விலகியிருக்கமுடியும், அப்படி விலகியிருந்தும் எவ்வளவு நெகிழ்ச்சியை எழுத்துக்குள் செலுத்தமுடியுமென்று என்னாலாவது குறைந்தபட்சம் உணரமுடிந்த அபாரமானதொரு தருணம் இது. இங்கே அவற்றைச் சுட்டுவதில் வாசிப்பவர்களுக்கு என்ன அனுபவம் கிடைக்குமென்று தெரியவில்லை, ஆனால் புத்தகத்தை வாசிக்கையில் ஏதேனுமொரு பொறியேனும் கிளம்பக்கூடும். ஒரு சின்னக் குறிப்பு, பிணம் கூடத் திசைதவறமுடியுமென்று உணர்த்துகிறது:

17.9.73 - நேற்றுச் சிவனுடன் பேசிக்கொண்டிருக்கையில் சிவன் “கரமணையில் - இல்லையில்லை பூஜைப் புரையில் சில பிராமணர்கள் பாலத்தையும் தாண்டிப் பிணத்தை எடுத்துக்கொண்டுபோவதைப் பார்த்தேன் - எனக்கு ஆச்சரியமாயிருந்தது (பிணத்தைக் கொண்டு போவதில்கூட ஒரு மரியாதை வேண்டாமா?) ஏனென்றால் அவர்கள் மயானத்தையும் தாண்டிப் போய்க்கொண்டிருந்தார்கள். பிறகு யாரோ அவர்கள் பின்னே ஓடிப்போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.” (பக்.530, நவீனன் டைரி).

பிணத்தின் திசையைக்கூடச் சுமந்துசெல்பவர்கள் சிதைத்துவிடக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்பதை உணர்கையில் அதையே புத்தகங்களுக்கும் பொருத்திப்பார்க்கத் தோன்றுவது மிகவும் அசௌகரியமாகத்தானிருக்கிறது, இருந்தாலும் அவையும் நிகழ்ந்துதானே தீரவேண்டும்? ;-)

நகுலன் நாவல்கள்
தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம்
காவ்யா, டிசம்பர் 2004.
விலை: ரூ. 450.00

http://dystocia.weblogs.us/archives/182

நன்றி: சன்னாசி

0 Comments:

Post a Comment

<< Home